Homeபிற செய்திகள்கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி தர சி.கே.சரஸ்வதி எம்எல்ஏ கோரிக்கை

கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி தர சி.கே.சரஸ்வதி எம்எல்ஏ கோரிக்கை

தனது மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று எம் எல் ஏ டாக்டர் சி கே சரஸ்வதி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 31 கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. எனது தொகுதியில் உள்ள பாசூர் பகுதியில் எனது உறவினர்களிடமிருந்து 5 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டுள்ளது. அங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கட்டிடங்கள் கட்ட நிதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க உரிய ஆணை பிறப்பிக்க மறுக்கிறது. இது சம்பந்தமாக பிரதமர், கவர்னர், தமிழகம் முதலமைச்சர், கல்வி அமைச்சரை வலியுறுத்தி உள்ளேன். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1 முதல் 12 வரை மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்படும்.

ஆனால் சரியான புரிதல் இன்றி பள்ளியில் இந்தி போதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது. நவோதயா பள்ளியை இந்த அரசு தர முடியாது என கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அப்பள்ளிகள் செயல்படவில்லை.

அப்பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கலாம். ஒரு மாணவருக்கு ரூபாய் 80 ஆயிரம் என்ற வீதத்தில் மத்திய அரசு செலவிடும். பள்ளி செலவு மத்திய அரசு இயக்கும். அதேபோன்று கேந்திரிய வித்யாலயா பள்ளியும் செயல்படும். ஆனால் கேந்திர வித்யாலாய பள்ளியில் தினசரி மாணவர்கள் வந்து செல்லும் வகையில் உள்ளது. இதற்கும் மத்திய அரசே முழுமையாக செலவிடும்.

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் விருப்பப்பட்டு மூன்றாவது மொழியாக எதையாவது ஒன்றை பயிலலாம். ஹிந்தி கட்டாயம் இல்லை. இதை விளக்கிக் கூறிய போதிலும் மாநில அரசு அனுமதி தர மறுக்கிறது.

இதனால் ஏழை எளிய மாணவர்கள் ஒரு தரமான கல்வியை அங்கு பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. அரசு அனுமதி தந்தால் உடனடியாக பள்ளியை கட்டி தரவும் மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு சி.கே.சரஸ்வதி எம்எல்ஏ கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img