நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு ஊழல் மறுப்பு விழிப்புணர்வு அவசியம் என கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசினார்
கோவை அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ஊழல் மறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவியர் நலன் புல முதன்மையர் வாசுகி வரவேற்றார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்து பேசுகையில், ஊழல் அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிட்டது. மக்கள் இணைந்து செயல்பட்டால் ஊழலை தடுக்க முடியும். இளைய தலைமுறையினர் ஊழலை மறுத்து வாழ்தல் வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் பங்கேற்று, பேசியதாவது: ஊழலானது நாட்டின் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது. ஊழலை மறுப்பதற்கு அனைத்து மக்களும் முன்வர வேண்டும். நாட்டின் முழு மையான வளர்ச்சிக்கு ஊழல் மறுப்பு விழிப்புணர்வு அவசியம்.
இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையை கடைப் பிடித்து வாழ வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு நேர்மையை மக்களிடத்தில் ஊக்குவித்து ஊழலற்ற சமுதாயத்தை கட்டமைக்க உதவுகிறது என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர் கௌசல்யா வாழ்த்தி பேசினார். முடிவில் மாணவியர் தலைவி ஆஷி கா நன்றி கூறினார்.



