கரூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சிக்குட்பட்ட பொது மக்கள் கட்டிட உரிமை பெறுதல், காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, புதிய சொத்து வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனு அளித்தனர் பொதுமக்கள்.
மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆணையர் சரவணகுமார். இதனால், மனு கொடுத்த பத்து நிமிடங்களில் மனுக்களில் காணப்படும் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
இதில் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தொழில்வரி செலுத்த கடந்த ஐந்து வருடமாக போராடி வந்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரிகள் தலையீடு காரணமாக தொழில் வரி செலுத்த முடியாத நிலையில், நேற்று நடத்திய சிறப்பு முகாமில் மனு செலுத்திய 10 நிமிடங்களில் தனது கோரிக்கையை ஏற்று தீர்வு கண் டதால் மகிழ்ச்சி அடைந்தார்.
இதே போல காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த ரோஷ்மி என்ற இஸ்லாமிய பெண், கடந்த இரண்டு வருடமாக வீட்டு வரி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த முகாமில் அளித்த மனுவை உடனடியாக பரிசீலித்து பத்து நிமிடங்களில் அவருக்கு வீட்டு வரி ரசீது அளிக்கப்பட்டது.
மனு அளித்த பத்து நிமிடங்களில் தீர்வு கண்டதால் ஆணையருக்கும், மேயருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



