அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா எச்சரித்தார்.
கோவை மாநகராட்சியில், கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு நடைமுறைகளை, வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முழுமையாக கடைபிடிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (ஆக.3) நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையாளர் பேசியதாவது:
முதல்வர் ஆணைக்கிணங்க, கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகள் 3-ம் நாளாக நடைபெறுகிறது.
வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை கொரோனா பாதிக்காமல் இருக்க அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும். நீங்களும் அணிந்திருத்தல் வேண்டும். அனைத்து வணிகர்களும் கடைகளுக்கு முன் கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா பேசினார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அனைத்து வணிகர்கள் எடுத்துக் கொண்டனர்.
மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமல்ராஜ், நகர் நல அலுவலர் மரு.ராஜா அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தினர் உணவகங்கள் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகள், காய்கறி மார்க்கெட்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.



