இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களின் அனைத்து விதமான தேவைகளையும், நலனையும் கருத்தில் கொண்டு, அனைத்து துறைகளிலும் புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடையவும், நாட்டு மக்களின் நலன் காக்கவும், வேளாண் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
“ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர் “
திருவள்ளுவரின் கூற்றுப்படி உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர். ஏனென்றால் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான/ பகுதி வாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள்.
அதன்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி அக்கிராமப் பஞ்சாயத்துகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின்கீழ் 2021-22 ஆம்ஆண்டு 35 கிராம பஞ்சாயத்திலும், 2022-23ஆம் ஆண்டில் 82 கிராமப் பஞ்சாயத்திலும், 2023-24 ஆம்ஆண்டில் 57 கிராம பஞ்சாயத்திலும் நடப்பு ஆண்டில் இத்திட்டம் 57 கிராமப் பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
இதுவரை இத்திட்டத்தின்கீழ் இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 231 கிராம பஞ்சாயத்திலும் செயல்படுத்தப்பட்டது.
இதுவரை இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கி அத்தொகுப்புகளில் மின் அல்லது சூரியசக்தி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி நுண்ணீர் பாசனத்துடன் பல மரக்கன்றுகளை நிரந்தர பயிர்களாகவும், குறுகியகால வேளாண் பயிர்களையும் சாகுபடி செய்திடச் செய்வது இத்திட்டத்தின் நோக்கம்.
வேளாண் வளர்ச்சியில் ஒருமாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் இதர திட்டங்களின் நிதிஒதுக்கீட்டில் 80 சதவீத நிதியை தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தில் வேளாண்மை & உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப்பொறியியல், வேளாண் வணிகத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் முக்கிய திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப்பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை & உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 2024-2025 ஆம் நிதியாண்டில் 2482 கிராமஊராட்சிகளில் ரூ.176.15 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், விதைநேர்த்தி, ஒருங்கிணைந்த உரநிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், இதர திட்டங்கள் மற்றும் உழவன் செயலியை விவசாயிகளின் கைபேசியில் பதிவிறக்கம் செய்து இடுபொருள் தேவையைப் பதிவுசெய்தல், பயிர்க்கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல், மத்திய மாநில திட்டங்களில் 80% திட்டங்களை விவசாயிகள் பயன்பெறும்படி செயல்படுத்துதல் முக்கியமாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், ஒருங்கிணைந்த பண்ணையம், றிவி-ரிமிஷிகிழி திட்டத்தில் புதிய நபர்களை இணைத்தல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி, கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றம் குடல்புழுநீக்கம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயனடைந் தோரின் கருத்துக்கள் பின்வருமாறு:
ஆற்காடுவட்டம், ஆயிலம்புதூர் கிராமத்தில் வசித்து வரும் முனுசாமி கூறியதாவது: நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 2 ஏக்கர் தரிசு நிலம் வைத்திருக்கிறேன். பருவமழைக் காலங்களில் மட்டுமே ஏதாவது பயிர்செய்யமுடியும். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசுநில தொகுப்பு குழு தொடங்கி, அதில்ஆழ்துளை கிணறு அமைத்தும், மின் இணைப்பு ஏற்படுத்தியும் சொட்டுநீர் பாசன கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி தந்து, மாஞ்செடிகள், தென்னங்கன்றுகள் வழங்கினார்கள். கடந்த 2 வருடமாக நல்ல முறையில் செடிகளை நட்டு பராமரித்து வருகின்றேன். ஊடுபயிராக உளுந்தும் பயிர் செய்து வருகின்றேன்.
இத்திட்டம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல ஆற்காடு வட்டம், மேலகுப்பம் கிராமமத்தில் வசித்து வரும் மாதவன் கூறியதாவது:
2021-2022 ஆம் நிதியாண்டில் எங்கள் தரிசுநில தொகுப்பு குழு தொடங்கப்பட்டது. எனக்கு 1 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எங்கள் குழுவிற்கு ஆழ்துளை கிணறு அமைத்தும், மின் இணைப்பு, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு களையும் ஏற்படுத்தி தந்து, தோட்டக்கலைத் துறையின் மூலம் மாஞ்செடிகள், தென்னங்கன்றுகள், தேக்கு உள்ளிட்ட மரக் கன்றுகள் வழங்கினார்கள்.
மேலும் எங்கள் பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் தார்பாலின், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்கள். தரிசு நிலமாக இருந்த எங்களுடைய நிலத்திலிருந்து தொடர்ந்து வருமானம் பெறும் வகையில் பரிசு நிலமாக அதாவது, தொடர்ந்து வருமானம் வரும் வகையில் விளை நிலமாக மாற்றி கொடுத்திருக்கின்றார்கள்.
இத்திட்டம் எங்கள் பகுதியிலுள்ள தரிசு நில விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.