முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் பதிவு செய்து 18வயது பூர்த்தியடைந்தவர்கள் முதிர்வுத் தொகையினை பெற விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு பெண்குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண்குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் 18 வயது முதிர்வடைந்த பிறகு முதிர்வுத் தொகை மற்றும் வட்டித்தொகையுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் பயன்பெற, இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளின் தயார் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். வருமானச்சான்று ரூ.72 ஆயிரத்துக்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண் வாரிசு இல்லை என்று சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 18 வயது முதிர்வடைந்தவுடன் வைப்புத் தொகை மற்றும் வட்டித் தொகையுடன் சேர்த்து முதிர்வுத் தொகையாக வழங்கப்படும்.
அதன்படி, விண்ணப்பம் செய்து அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18வயது முதிர்வடைந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்டத்தி லுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவு அலுவலர், மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் அசல் வைப்பு நிதிப் பத்திரம், பயனாளியின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், மற்றும் பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.