சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் செல்வன் மதுரம் ராஜ்குமார்.
காலத்தை வென்ற கலாம், அவ்வையாரின் ஆத்திசூடி, பாரதியாரின் கவிதைகள் உள்ளிட்டவை மற்றும் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கவிதையும் என தனது 13 வயதிற்குள் 9 நூல்கள் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இம்மாணவன் கடந்த 2018 ஆம் ஆண்டு, தலைப்புகள் வழங்கி உடனடியாக கவிதைகளை தொடர்ந்து 10 மணி நேரம் எழுதியதற்காக உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் பயின்று பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தனது தந்தை செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சூழ்நிலையிலும், தனது முயற்சியால் இளம் வயதில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
அத்தோடு, மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதை கேள்வியுற்ற சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாணவனை அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இராமுருகன், மண்டல தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் திருமதி.பவானி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



