புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றில் பார்வையாளர்களுக்கான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே மக்களை அனுமதிக்க வேண்டும்.
கோவை மாநகர காவல் துறையானது மக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள், 13 முக்கிய சந்திப்புகள், 66 வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி, தடாகம், பாலக்காடு சாலைகள், ரேஸ்கோர்ஸ் சாலை, மருதமலை, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்டவற்றில் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெளியூரில் இருந்து நகருக்குள் நுழையும் 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளார்கள்.
இதுதவிர 44 இருசக்கர வாகனங்கள், 23 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்கள் குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்க ளில் பாதிக்கப்படுவோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் 45 ஆம்புலன்சுகள் நிறுத்தப்படும். பாதுகாப்பு பணியில் 1,050 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புகார்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை: 0422&2300970, 81900&00100, வாட்ஸ் ஆப்: 94981&81213 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.



