fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் நுண்ணுயிர் பாசன திட்டத்துக்கு ரூ.32.89 கோடி நிதி ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுண்ணுயிர் பாசன திட்டத்துக்கு ரூ.32.89 கோடி நிதி ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி யின் நுண்ணுயிர் பாசன திட்டத்துக்கு வேளாண் துறை சார்பில் ரூ.32 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 2021-22ம் ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டம் 660 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்க ரூ.32 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் மணிலா உளுந்து துவரை போன்ற பயறுவகை பயிர்கள் கம்பு மக்காச்சோளம் போன்ற சிறுதான்ய பயிர்கள் மற்றும் கரும்பு போன்ற பயிர்களில் சொட்டுநீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழை தூவுவான் ஆகிய நுண்ணுயிர் பாசன அமைப்பு ஏற்படுத்தி தரப்படும்.

நுண்ணுயிர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவித மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவித மான்யமும் வழங்கப்படும்.

நுண்ணுயிர் பாசன அமைப்பு சிறுகுறு விவசாயிகள் 2 ஹெக்டேர் பரப்பு வரையிலும் மற்ற விவசாயிகள் 5 ஹெக்டேர் பரப்பு வரையிலும் நிர்ணயிக் கப்பட்ட மானியத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

இது நீங்கலாக சொட்டுநீர் பாசனம் அமைக்க பிவிசி பைப் லைன் புதைக்க பள்ளம் தோண்ட எல்லா பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை வழங்கப்படும்.

கரும்பு சாகுபடி செய்யும் சிறுகுறு மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் திறந்தவெளி கிணற்றின் மூலம் மண்ணின் மேற்பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.38ஆயிரத்து 235, மண்ணில் புதைத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.49ஆயிரத்து 758, குழாய் கிணறு மூலம் மண்ணின் மேற்பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.24ஆயிரத்து 711, மண்ணில் புதைத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.36ஆயிரத்து 234ம் கூடுதல் மானியம் வழங்கப்படும்.

சொட்டுநீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணுயிர் பாசனம் அமைக்க ஏற்படுத்த விரும்பும் விவசாயிகள் 6 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், நிலபுல வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்பரிசோதனை சான்று, சிறுகுறு விவசாய சான்று ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அல்லது அந்தந்த பகுதியில் உள்ள பகுதி உதவி வேளாண் அலுவலரையோ அணுகி ஆவணங்களை அளித்து உடனே பதிவு செய்து பயனடையலாம்.

மாவட்ட விவசாயிகள் கிணற்றுநீர் பாசனத்தையே ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்வதால் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் அதிகமகசூல் பெறவும் நுண்ணுயிர் பாசன திட்டம் பெரிதும் பயனளிக்கும் எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்று அதிக விளைச்சலை பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img