fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க 100 குடும்பங்களுக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க 100 குடும்பங்களுக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைச்சர் கே.என்.நேரு தகவல்

கிராமப் பகுதிகளில் கொரோனா வைரஸ்தொற்று பரவலை தடுக்கும் வகையில், 100 குடும்பங்களுக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வருவதாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புஅலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சித்துறை), மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத் துறை) ஆகியோர் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையாளர் கா.பாஸ்கரன், திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 7-ம் தேதி வரை, கொரோனா தொற்றால் 13,087 பேர் பாதிக்கப்பட்டு, 9,131 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சிகளில் 4,066 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டு,32 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டபகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் 78 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது. 3,600 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, “திருப்பூர் மாநகரில் தொற்றின் பாதிப்பு 51 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளது. முற்றிலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் 100குடும்பங்களுக்கு ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மாநகரக் காவல் ஆணையர் வனிதா, காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் உட்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img