கோவையில் சந்திரன்ஸ் யுவா பவுண்டேசனுடன் இணைந்து, டிரைவ் த்ரு வேக்சின் எனப்படும், காரிலேயே அமர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக செயல்படுத்தியது பிக்கி புளோ.
இதன் கோவை கிளை தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ரிடிஷா நிவேதா இந்த பணியை ஒருங்கிணைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஏற்கனவே இணைய தள படிவத்தில் முன்பதிவு செய்துள்ளோருக்கு மட்டும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கார்களில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டு, தடுப்பூசி சமுக இடைவெளி விதியை பின்பற்றி செலுத்தப்பட்டது. கார்களில் இதற்கென தனி அடையாளமிடப்பட்டு, இ. பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு உதவ உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
காரில் இருந்தவாறே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இந்த முறையால், முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை. மக்கள் அதிகம் உள்ள இடங்களில் வீல் சேர்களிலும் செல்ல முடிவதில்லை. இவர்களின் வசதிக்காக இது உருவாக்கப்பட்டு உதவி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கோவை பிக்கி புளோ உறுப்பினர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 25 லட்சம் மதிப்பிலான நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் ஜெனரேட்டரை நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் 350 பேர் பங்கேற்று பயனடைந்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்கள், ஹார்மோன் மாத்திரை சாப்பிடும் பெண்கள், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு உட்பட்டோருக்கு சிறப்பு கவனம் செலுத்தப் பட்டது. தவிர, சமீபத்தில் அறுவை சிகிச்சையில் இருந்தவர்கள், மாத்திரை ஒவ்வாமை உள்ளோர், டயாலிஸிஸ் நோயாளிகள், ரத்த உறையாமல் இருக்க மருந்து சாப்பிடுவோர் போன்றவர்களும் இதில் கவனம் செலுத்தப்பட்டனர். ஒரு மாதத்திற்குள் டிடி ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளும் பரிசோதனைகளும் வழங்கப்பட்டன.