fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார் ஒரே மாதத்தில் மனுக்களுக்கு தீர்வு என பேட்டி

தமிழகத்தின் 30வது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றார் ஒரே மாதத்தில் மனுக்களுக்கு தீர்வு என பேட்டி

தமிழகத்தின் 30வது புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக டிஜிபியாக திரிபாதி உள்ளார். இவர், 2019ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு (ரயில்வே), கரன்சின்ஹா (தீயணைப்புத்துறை), சஞ்சய்குமார் (எல்லை பாதுகாப்பு படை) ஆகியோரது பெயர்களை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவர்களது பெயர்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்த பட்டியலில் உள்ளவர்களை பரிசீலித்த தமிழக அரசு, சைலேந்திரபாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று மாலை உத்தரவிட்டது. இவர், பதவி ஏற்ற நாள் முதல் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.

சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதத்துடன் முடிகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதால், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.

இதையடுத்து டிஜிபி அலுவலகம் சென்ற சைலேந்திரபாபு புதிய டிஜிபியாக இன்று பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்ற அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவரிடம் பொறுப்புக்களை ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சைலேந்திர பாபு கூறியதாவது: முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் 30 நாட்களில் தீர்வு காணப்படும். தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஒரு அறிய சந்தர்ப்பம்.

தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிபியாக அரிய வாய்ப்பை தந்த முதல்வருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும்.

மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img