கொரோனா பரவல் தடுக்க ரூ.39 கோடிக்கு தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வரத்துவங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் பரவல் மிக அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி உச்சத்தில் இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து நேற்று பாதிப்பு 19 ஆயிரத்து 448 ஆக இருந்தது. உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஊக்கப்படுத்தியது. மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்பட்டன. இருப்பினும் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தடுப்பூசி பற்றாக்குறையை போக்க கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். உடனடியாக 50 லட்சம் தடுப்பூசிகள் அனுப்புமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் மாத இறுதிக்குள் கூடுதலாக 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளன.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. மேலும் நாளை முதல் பொதுமக்கள் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் செலுத்திக் கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசின் மருத்துவத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:
ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை மொத்தம் 42,58,760 கரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 13,43,820 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 3,30,560 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 21,55,180 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 4,29,200 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.