fbpx
Homeபிற செய்திகள்குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் நன்றி

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் நன்றி

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவில் மிக அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ம் தேதியன்று 4 ஆயிரம் ரூபாய்- வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று பதவியேற்றவுடன் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 4,153.39 கோடி ரூபாய் செலவில் சுமார் 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் கையொப்பமிட்டார்.
அந்த ஆணையை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 10.5.2021 அன்று அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கு தலா 2,000- ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிவாரணத் தொகை வழங்கி பொதுமக்களின் பொருளாதார பாதிப்புக்கு ஆறுதல் வழங்கும் பணி ஒருபக்கம் மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பில் இருந்து தமிழக மக்களை மீட்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் தற்போது நிலவும் உண்மையான களநிலவரம் குறித்து ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

அதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் கூடுதல் படுக்கை வசதிக்கான கட்டமைப்புகளை நிறுவவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் படுக்கை வசதிகளை மேற்கொள்ளவும், இவற்றில் பணிபுரிய தேவைக்கேற்ப மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை பயன்படுத்தவும், மத்திய அரசிடம் இருந்து ஆக்ஸிஜன், தடுப்பு ஊசி மருந்து உள்ளிட்டவற்றை பெறவும், மருத்துவ படிப்பு முடித்து இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவினரை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த குழுவினர் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கை வசதி இருப்பு, மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் நோயாளிகளுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி கிடைக்கப்பெற்று, பாதுகாக்கப்படுகின்றார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2,000 ரூபாய் 5,25,292 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்றது.
தற்போது இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரமும் 14 மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலை தடுக்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும், நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் நாள் ஒன்றுக்கு 200 வீதம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்
பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு நிவாரண தொகை பெற்றுக்கொண்ட ராசிபுரத்தை சேர்ந்த பெயிண்டிங் வேலை செய்து வரும் கே.கதிர்வேல் (30) தெரிவித்ததாவது:
நான் ராசிபுரம் இந்திரா காலனியில் குடியிருந்து வருகிறேன். பெயிண்டிங் வேலை செய்து வருகிறேன். தற்போது பொது முடக்கத்தால் எனது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்து, முதல் தவணை 2000 ரூபாய் பெற்றுக் கொண்டேன். பொது மக்களை காப்பதற்காக முழு ஊரடங்கு அறிவித்த போதும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கொரோனா நிவாரண நிதி வழங்கியதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா சிறப்பு நிவாரண தொகை பெற்றுக்கொண்ட நாமக்கல்லை சேர்ந்த பூ விற்கும் தொழில் செய்து வரும் ஜீவானந்தம் மனைவி ஜெ.அமுதா (38) தெரிவித்ததாவது.

நாமக்கல் நகராட்சியில் திருநகர் தெருவில் வசித்து வருகிறேன். நான் தினந்தோறும் பூ விற்கும் தொழில் செய்து வருகிறேன். தினசரி ரூ.200 முதல் ரூ.300 வரை கிடைக்கும் இத்தொகையினை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். தற்போது பொது முடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை போன்று நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பொது முடக்கத்தில் கொரோனா நிவாரணத் தொகையினை வைத்து எனது குடும்ப பொருளாதாரத்தை சரிசெய்து கொள்வேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதி வழங்கியதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா சிறப்பு நிவாரண தொகை பெற்றுக்கொண்ட சேந்தமங்கலத்தை சேர்ந்த தையல் தொழில் செய்து வரும் பி.சாந்தி (45) தெரிவித்ததாவது:

சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன். வீட்டில் தையல் இயந்திரம் வைத்து தையல் தொழில் செய்து வருகிறேன். தற்போது பொது முடக்கத்தினால் போதிய வருமானம் இல்லாமல் இருந்தேன். தமிழக முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணத் தொகை வழங்குவதாக அறிந்த நிலையில் இன்று எனக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க பெற்றேன். இந்த தொகை என்னை போன்ற பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதியுதவி வழங்கியதற்காக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராசிபுரத்தை சேர்ந்த மாவு விற்பனை தொழில் செய்து வரும் பெ.ஆனந்தன் மனைவி ஆ.புஷ்பா (49) தெரிவித்ததாவது:
ராசிபுரம் ஹவுசிங் போர்டில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நான் வீட்டில் மாவு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறேன். இந்த கொரோனா காலக்கட்டத்தில் போதிய வருமானம் இல்லாமல் பொருட்கள் வாங்கி தொழில் செய்ய முடியாத நெருக்கடியில் இருந்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கியுள்ளார். இந்த தொகையினை வைத்து எனது தொழிலை சரிசெய்து கொள்வேன். கொரோனா நிவராணத் தொகையினை வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேட்டி கண்டு தொகுப்பு:
சி.சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
மற்றும் ஆர்.சரண், சீ.கோகுல். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டம்

படிக்க வேண்டும்

spot_img