கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலர் டாஸ்மாக் கடைகளை துளையிட்டு மதுபாட்டில்களை திருடி வரும் சம்பவம் கோவையில் அரங்கேறி வருகிறது.
இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சூழலில், சூலூர் காவல் நிலைய எல்லையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து லாரி மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி(30) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.