மாநில அளவிலான ஜூனியர் பேட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த ஈரோடு அரசு பள்ளி மாணவர்களை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பாராட்டி வாழ்த்தினார்.
தமிழ்நாடு பேட்மின் டன் (பூப்பந்து) கழகத்தின் சார்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 40ம் ஆண்டு ஜூனியர் பேட்மின்டன் போட்டி கடந்த 11ம் தேதி, 12ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது.
இதில், ஈரோடு மாவட்ட அணியின் சார்பில் நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான சிவசுதர்சன், சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.
இதில், காலிறுதி போட்டியில் ஈரோடு அணி, கடலூர் மாவட்ட அணியை 35-&19, 35-14 என்ற புள்ளியிலும், அரையிறுதியில் திண்டுக்கல் அணியை 35-33, 35-32 என்ற புள்ளியிலும் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதையடுத்து இறுதி போட்டியில் ஈரோடு அணி, மயிலாடுதுறை அணியுடன் மோதியது.
இதில், 36-34, 35-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இப்போட்டியில் சிறந்து விளையாடிய அரசு பள்ளி மாணவர்களான சிவசு தர்சன், சுரேஷ்குமார் ஆகியோர் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அணிக்கு தேர்வான சிவ சுதர்சன், சுரேஷ்குமார் ஆகியோரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பாராட்டி வாழ்த்தினார்.
மேலும், ஈரோடு மாவட்ட பேட்மின்டன் கழக புரவலர் ரவிந்திரநாத், செயலாளர் சுல்தான் சையது, தலைவர் பிரகாஷ், இணை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.



