கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் இயங்கிவரும் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண் டும் துவங்கி இருப்பதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பல்வேறு கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாலை 5 மணிக்கு மேல் செயல்பட்டு வந்த ஹார்டுவேர் கடை, பேக்கரி உட்பட நான்கு கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலித்துள்ளனர்.
மறு உத்தரவு வரும் வரை பட்டியலிடப்பட்ட கடைகள் தவிர மற்ற கடைகளை 5 மணிக்கு மேல் திறந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



