கோவையின் சாலை ஓரங்கள் மற்றும் குளக்கரைகளில் மர்மநபர்கள் அடிக்கடி மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
சமீபமாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு யார் காரணம் எந்த மருத்துவமனை இந்த சட்டவிரோத வேலைகளை செய்கிறது என பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் கோவை சிரியன் சர்ச் சாலை பகுதியில் மருத்துவ கழிவுகள், காலியான ஊசிகள் மருந்துகள் கொட்டப்பட்டுள்ளது. அவை நாளடைவில் துர்நாற்றம் வீசத் தொடங்கி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இந்தநிலையில் அப்பகுதி மக்கள் சிலர் இந்த சட்டவிரோத செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் அதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை யார் ? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.



