இந்தியாவில் நிதி நிறுவனம் மற்றும் வங்கிச் சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில், நிதி நிறுவனங்கள் ஏதேனும் மோசடி வேலைகளில் ஈடுபட்டால், அவற்றுக்கு தடையும் விதித்து வருகின்றன. அந்த வகையில், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎஃப்சி) புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நகைக் கடன், வணிகக் கடன் உள்ளிட்டவை வழங்கும் ஐஐஎஃப்எல் நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் கடன் வழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் நகைக் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், “வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி, ஒரு நபர் ரூ.20,000-க்கும் மேல் கடனை பணமாகப் பெற முடியாது. அதனால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000-க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக வழங்கக்கூடாது. அதேநேரத்தில், நகைக் கடனாக ரூ.20,000-க்கும் மேல் தேவைப்படுபவர்கள் தங்களின் வங்கிக் கணக்கின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரொக்க பரிமாற்ற முறையில் வருமானவரித் துறையின் உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வங்கியில்லா நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய உத்தரவால் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. பெரும்பாலான சாதாரண பாமர மக்களும் சிறு விவசாயிகளும் தங்களின் அவசர பணத் தேவையை அதிக தொகை கிடைக்கும் என்பதற்காக வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நகைக் கடன் பெற்று சமாளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் சிறு விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்து எடுத்துச் செலவழிப்பது என்பது அவர்களுக்கு சிரமத்தைத் தருகிறது.
ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கக் கடன் என்பதை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்தால் நல்லது. ரூ.1 லட்சமாக உயர்த்தி அறிவித்தால் மிகமிக நல்லது.
ரொக்கக் கடன் வரம்புத் தொகையை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்தால் ஏழை, நடுத்தர மக்கள் அனைவரும் பெரிதும் பயனடைவார்கள்; நல்லதோ மிக நல்லதோ எது நடந்தாலும் மிகமிக விரைவாக நடந்தால் நல்லது!