முதல்வர் வழிகாட்டுதலின்படி ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டம் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நலம் பெறுவதற்கான நடைப்பயிற்சி இயக்கம் நடைபெற உள்ளது.
நடைப்பயிற்சி இயக்கத்தினை வரும் நவம்பர் 4-ம் தேதி முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் – கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டு சாலை வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நலவாழ்வு நடை பயிற்சி இலக்காக 8 கிலோமீட்டர் அளவிற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடைபாதை வழித்தடங்களில் தாகம் தணிக்க குடிநீர் வசதிகள், ஓய்வெடுக்க அமரும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைக்க உள்ளார்.
நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது.
குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை ஆய்வு செய்து தக்க ஆலோசனை அளிக்க சிறப்பு மருத்துவர்களை கொண்ட மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபயிற்சியின்போது ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய குடிநீர் மற்றும் பழச்சாறுகள் விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நடைபயிற்சி பழக்கத்தினை ஊக்குவிக்கவும் தொடர்ந்து வாழ்வியல் நெறியாகவும் கடைபிடிக்க இந்த இயக்கம் உதவிடும். தினமும் நடைபயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நலவாழ்வை எளிதாக பெறலாம். இந்நடைபயிற்சி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, இதயத்தை பலப்படுத்துகிறது, எலும்புகளை வலுவாக்குகிறது, உடல் எடையை குறைக்கிறது, நல்ல உறக்கத்தினை தருகிறது. மொத்தத்தில் இந்த நடைபயிற்சியானது ஆரோக்கியமான வாழ்நாளை தருகிறது.
இயக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அனைத்து அரசுப் பணியாளார்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று நடப்போம் நலம்பெறுவோம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.