fbpx
Homeபிற செய்திகள்வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆற்றல்மிகு அரசு -தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆற்றல்மிகு அரசு -தென்காசி மாவட்ட இளைஞர்கள் மகிழ்ச்சி

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு“ –
என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க மணலின்கண் உள்ள கேணியிலே ஆழமாகத் தோண்டத்தோண்ட நீர்சுரக்கும். அதுபோல மக்கள் நூல்களைக் கற்கக்கற்க அறிவு வளரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக 05.01.2024 அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையகட்டடத்தினை திறந்துவைத்தார்.

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் தங்களது வாழ்க்கையில் மேம்படுவதற்காக அறிவுசார் மையங்களை நிறுவி வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திப் பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது.

இம்மையத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டித்தேர்வில் கலந்து கொள்வோர் படிக்கத் தேவையான பொதுஅறிவுநூல்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், அரசியல், வரலாறு, இலக்கியம், நிதிமேலாண்மை மற்றும் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரேநேரத்தில் 75 பேர் அமர்ந்து படிக்கும்வகையில், வாசிப்புஅரங்கம், ஸ்மார்ட் கிளாஸ் அரங்கம், குழந்தைகள் படிப்பதற்கான வசதி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயன்அளிக்கும் வகையில், ரூ.1.5 கோடியில் ‘நூலகம் மற்றும் அறிவுசார் மையம்‘ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுசார் மையத்தில், இந்திய நடுவண் அரசின் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கித்தேர்வு நிறுவனம் ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு சிறந்த போட்டித்தேர்வு பயிற்சியாளர்கள், வெற்றியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப்பணிகளுக்கு சென்றவர் களையும் அழைத்துவந்து பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.

‘’கல்லூரி படிப்புமுடிக்கும் இளைஞர்களுக்கு அரசுப்பணி என்பது ஒரு பெரும்கனவாக உள்ளது. அந்தக்கனவு நிறைவேற, வசதிப்படைத்தவர்கள், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று தயாராகிறார்கள். வசதியில்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், வீட்டில் இருந்தபடியேயும், நண்பர்களுடன் கலந்துரையாடியும் வழிகாட்டுதலும், பயிற்சியும் இல்லாமல் சுயமாகத் தயாராகிறார்கள். தொடர் பயிற்சியும், கடந்தகால போட்டித்தேர்வு வினாத்தாள்களும் மட்டுமே அவர்களுடைய ஒரே துருப்புச்சீட்டாக உள்ளது. தற்போது அரசு வேலைக்கானப் போட்டித் தேர்வுகளுக்கு கடும்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இந்த அறிவுசார் மையத்தில் பயிற்சியும் வழிகாட்டுதலும், போட்டித் தேர்வுக்கான அனைத்து வகைப் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

போட்டிதேர்வர்கள், இந்த நூலகத்தில் அமர்ந்து படித்து, அங்குள்ள அறிவுசார் மையத்தில் தினமும் இலவசமாக நடக்கும் பயிற்சிவகுப்புகளில் பங்கேற்று போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தில் ரூ.1.5 கோடியில் இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அறிவுசார் மையத்தைக் குறித்து போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சங்கரன்கோவிலைச் சேர்ந்த க.வேல்முருகன் கூறியதாவது:
எனது தந்தை பெயர் கந்தசாமி. நான் இலவன்குளம் ரோடு நேதாஜி நகரில் வசித்து வருகிறேன். நான் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி – 4 தேர்வுக்குப் படித்துவருகிறேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். என்னால் போட்டித்தேர்வுக்குப் பயிற்சி மையத்தில் சென்று படிப்பதற்கு வசதியில்லை.
என் போன்ற ஏழைமக்களுக்கு இந்த அறிவுசார் மையத்துடன் கூடிய நூலகம் மிகவும் உதவியாக உள்ளது. இங்கு அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் படிக்கும்வகையில் அனைத்து புத்தகங்களும் நிறைந்துள்ளது. இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெ.மணிகண்டன் கூறுகையில்` எனது தந்தை பெயர் வெள்ளத்துரை. திருவேங்கடம் சாலையில் வசித்து வருகிறேன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ரயில்வே தேர்வுக்கு முயற்சி செய்து வருகிறேன்.

எனது குடும்பம் நடுத்தரக் குடும்பம். என்னால் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கு வழியில்லை. இந்த நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி பெறும் வகையில் அனைத்து புத்தகங்களும் உள்ளது. இங்கு பயிற்சி மையத்தின் மூலம் இலவச மாதிரித் தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. என்போன்ற சாமானிய மக்களுக்கு இந்த அறிவுசார் மையம் பேருதவியாக உள்ளது. இந்த அறிவுசார் மையத்துடன் கூடிய நூலகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ள அறிவுசார் மையம் தென்காசி மாவட்டத்தில் அரசுத் தேர்வு எழுதும் மாணவ / மாண வியர்களின் அரசுப்பணி கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும்.

படிக்க வேண்டும்

spot_img