தூத்துக்குடி சில்வர் புரம் பகுதியில் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையம் சார்பில் மாற் றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுயம்வரம் நடந்தது.
இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
தேர்வு செய்த 5 ஜோடிகளுக்கும் 13.12.23 புதன் காலை 10 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முன்னிலை வகித்தார். அதை தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர்.
ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி. பிரிட்ஜ், வாஷிங் மெஷின். கட்டில், மெத்தை, பீரோ, இன்டக்சன் அடுப்பு, வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அருட் பணியாளர்கள். அருட்சகோதரர்கள், அருட் சகோதரிகள், நன்கொடையாளர்கள் மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் நல் உள்ளம் கொண்ட பிறரன்பு உடையோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நல்லாசி வழங்கினார்கள்.
ஏற்பாடுகளை லூசியா இல்ல இயக்குனர் ஜான் பென்சன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.



