பெரியநாயக்கன்பாளையத்தைச் சார்ந்த இயற்கை வேளாண் விவசாயி சிறு,குறு விவசாயிகள் பயனடையும் வகையில் குறைந்த விலையிலான தீவனம் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் தீரஜ் ராமகிருஷ்ணா (29). இவர் இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்டு இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது அவர் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையிலான தீவனம் அறுக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.
விவசாயிகள் விரும்பிய இடத் திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ள இந்த இயந்திரமானது 1 ஹெச்.பி. மோட்டார், பிளேடு, பிரேம் ஆகியவை கொண்டு வடிமைக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 500 கிலோ பசுந்தீவனங்களை வெட்டக்கூடிய திறன் படைத்தது.
இயந்திரத்தின் விலை அனைத்து வரியினங்கள் உட்பட ரூ. 10 ஆயிரம் ஆகும். இந்த இயந்திரத்தில் கோ- 4, கோ- 5, 5 நேப்பியர், சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்கள் மற்றும் மல்பரி, வாழைக்கன்றுகள் போன்றவற்றை வெட்ட முடியும்.
திரஜ் ராமகிருஷ்ணா கூறியதாவது: சிறிய விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு இந்த இயந்திரம் வரப்பிரசாதமாகும். மிகக் குறைந்த விலையுடைய இதனை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு பார்சலில் அனுப்பி வைக்கிறோம்.
கூடுமானவரை இதில் பழுதாகும் வாய்ப்பே இல்லை. இதனை வாங்கியவர்களுக்கு அதை இயக்குவதிலோ இல்லை வேறு இடர்பாடு ஏதாவது இருந்தாலும் 5 நாட்களுக்குள் இந்த இயந்திரத்தை நாங்களே மீண்டும் திருப்பி வாங்கிக் கொள்கிறோம்.
பராமரிப்பிற்கு எளிதாகவும், விவசாயிகள் கையாளுவதற்கு எளிமையாகவும் இருக்கும் வகையில் மிகச் சிறிய அளவில் இந்த இயந்திரம் வடி வமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள், பண்ணைக் கூலித் தொழிலாளர்கள் என யார் வேண்டுமானாலும் இயக்க முடியும் என்றார்.



