கோவை சூலூர் அடுத்த கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா தொழில் பூங்காவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய ளித்த அவர் கூறியதாவது: கிட்டாம்பாளையம் கிராமத்தில் 316 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கடந்த கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இங்கிருந்த சிறு குறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் இத்திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரசு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 24 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொழில் பேட்டையில் உள்ள 585 மனைகளுக்கும் கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் 26 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு எல்லா பணிகளும் முடிந்த பிறகு இன்னும் ஒரு ஆண்டில் முதல்வர் ஸ்டாலினை அழைத்து தொழிற்பேட்டையை திறக்க திட்டமிட்டுள்ளோம். திட்டம் செயல் வடிவத்திற்கு வந்த பிறகு 10,000 பேருக்கு நேரடியாகவும் 20,000 பேருக்கு மறை முகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



