தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 232 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.22,500 வீதம் 10 நபர்களுக்கும் மற்றும் இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.2,25,000 -க்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மதுமதி, தனித்துணை ஆட்சியர் ஜி.முரளி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



