Homeபிற செய்திகள்டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன மாணவர்கள் மூவர் தேர்வு

டெல்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன மாணவர்கள் மூவர் தேர்வு

புதுடெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசு தினவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அணிவகுப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாட்டின் முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் படிக்கும் 3 மாணவர்கள் நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பாக தேர்வாகி உள்ளனர்.

நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பி.கோபி கிருஷ்ணன், ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆர்.அபர்ணா ஆகியோர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சார்பிலும், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் ஆர்.ராகுல், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 8-வது முறையாக குடியரசு தினஅணி வகுப்பில் பங்கேற்கின்றனர்.
அவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி (டிச.21) பாராட்டி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர். அலமேலு மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், முனைவர் கேசவசுவாமி, முனைவர் ஜெ.சுபாஷினி ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img