1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போரானது பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில்,டிசம்பர் 16 ஆம் தேதி இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை ராணுவம்) வென்று வங்கதேசம் உருவாக்கப்பட்டது.
அப்போது, சுமார் 90,000 பாகிஸ்தான் போர் வீரர்கள் சரணடைந்தனர். இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும், இந்த நாளில் இப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிலையில்,வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 வது ஆண்டு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், பாகிஸ்தானுடனான இந்தியாவின் வெற்றி தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில், ”வங்கதேச விடுதலைப் போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு எனது வீரவணக்கம்” என்று எழுதி கையெழுத்திட்டுள்ளார்.



