கோவை போத்தனூர் – பொள்ளாச்சி இடை யே 40 கி.மீ. அகல ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. போத்தனூர் – பொள்ளாச்சி வழித்தடத்தில் கடைசியாக 2020 மார்ச் மாதம் ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 17 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த பின், அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து, ரயில்வே வாரியம் அனுமதி அளித்ததால், கோவையில் இருந்து போத்தனூர் – பொள்ளாச்சி வழியாக மீண்டும் ரயில்சேவை தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் 10-ம் தேதி முதல் தினமும் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்கு பழநி சென்றடையும்.
பழநியில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் காலை 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06462) மதியம் 2 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பழநியில் இருந்து வரும் 10-ம் தேதி முதல் தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் தினமும் காலை 7.20 மணிக்கு புறப் படும் ரயில் (எண்:06480) காலை 10.10 மணிக்கு பழநி வந்தடையும்.
கோவை ரயில்நிலையத்தில் இருந்து வரும் 13-ம் தேதி முதல், ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06419) இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.
பொள்ளாச்சியில் இருந்து வரும் 14-ம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06420) காலை 8.40 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



