கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்கக்கோரி ஹிந்து மக்கள் புரட்சி படை அமைப்பினர் சிவ பெருமான் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் வழிபாட் டுத்தலங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இந்த சூழலில், ஹிந்து மக்கள் புரட்சி படை அமைப்பினர் சிவபெருமான் வேடமணிந்து விநாயகர் சிலையை ஏந்தியவாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து சில நாட்கள் ஆகி உள்ளது. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் வர உள்ளது. இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய திருக்கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



