தர்மபுரி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது: தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சி, மலையூர் காடு பகுதியில் சுமார் 12,000 மக்கள் வசித்து வருக்கின்றனர்.
இம்மக்கள் சாலை வசதியில்லாத காரணத்தால் மருத்துவம், கல்வி, வியாபாரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்றவற்றிற்கு செல்ல வேண்டு மென்றால் அண்டை மாவட்டமான சேலம் மாவட்ட எல்லை வழியாக சுமார் 40 கி.மீ கடந்து சென்று தருமபுரி மாவட்டத்தில் நுழைய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் மருத்துவம், கல்வி, வியாபாரம், போக்குவரத்து போன்றவற்றிற்கு சேலம் மாவட்டத்தோடு தொடர்பு வைத்துள்ளனர்.
இம்மக்கள் மேற்கண்ட வசதிகளை தங்களது சொந்த மாவட்டத்தில் பெறுகின்ற வகையி லும், அண்டை மாவட்டத்தில் 40 கி.மீ தூரம் சுற்றி தங்களது சொந்த மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்கின்ற வகையிலும், மானியதஅள்ளி ஊராட்சி, பரிகம் கோணயங்காடு முதல் கம்மம்பட்டி ஊராட்சி, மலையூர் காடு வரை வனப்பகுதியில் 3.2 கி.மீ தூரம் சாலை அமைக்க வேண்டும்.
மேலும், தர்மபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுகிறது. அந்த சமயங்களில் மேற்கண்ட சாலை வழியாக சேலம், மேட்டூர் சென்றடையும் வகையில்மாற்று பாதையாக இச்சாலை அமை யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி, கோம்பேரி மலை அடிவாரம் முதல் கொண்டகர அள்ளி ஊராட்சி, காளிகரம்பு வரையுள்ள காப்புகாட்டில் சாலை அமைப்பதன் மூலம் தர்மபுரி நகர பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு தொடர்வண்டி மூலம் பயணம், வியாபாரம், போன்றவற்றை மேற்கொள்ளவும், பொம்மிடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் பொதுமக்கள் மருத்துவம், வியாபாரம் போன்ற வற்றை தருமபுரி நகரத்தில் மேற் கொள்ளவும் இச்சாலை பொது மக்களுக்கு வசதியாக அமையும் வகையில் போக்குவரத்து சாலை யாக அமைக்க வேண்டும்
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில், பையன்குட்டை, ஜெக மான்குட்டை, ஒட்டன்கொல்லை, மல்லன்கொல்லை ஆகிய மலை கிராமங்களில் பல ஆண்டு காலமாக சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள விவசாய நிலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கும், மருத்து வம், கல்வி, அரசு அலுவல் ரீதியான வேலைகளுக்கும் போக்குவரத்து சாலை வசதி யின்றி அவதியுறுகின்றனர்.
மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி மலை அடிவாரம் முதல் ஜெக மான்குட்டை வரையுள்ள 1.5 கி.மீ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைவழி பாதையை பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சாலையாக அமைக்க வேண்டும்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி, தண்டுமாரியம்மன் கோவில் அருகில் இருந்து கோம் பேரி கிராமத்திற்கு செல்கின்ற சாலையில் சுமார் 850மீட்டர் மண்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், வனப்பகுதியில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான தடுப்பணைகள் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ளது.
இவற்றை கண்டறிந்து உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், வனப்பகுதி நீரோடைகளில் புதிய தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் வனப்பகுதிகளின் அருகே உள்ள விவசாய மக்கள் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, வாழ்வாதாரம் பெருகும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.



