fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி அரசு பள்ளிகளில் வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு

தர்மபுரி அரசு பள்ளிகளில் வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு

தர்மபுரி அரசு அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை அடுத்து புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அப்பணியை பார்வையிட்டு தரமாகவும், வேகமாகவும் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, மாணவிகளிடம் சத்துணவு தரம் குறித்து கேட்டறிந்தார். நன்றாக படித்து, நல்ல நிலைக்கு சென்றடைய தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்று மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.

பள்ளியில் பழுதான கட்டிடங்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மேசை நாற்காலிகள் வாங்கவும், கழிவறையை தூய்மையாக பராமரிக்கவும், பள்ளியைச் சுற்றி தூய்மை செய்யவும், கொசுமருந்து புகை அடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். பெரும்பாலான கட்டிட வகுப்பறைகள் பராமரிப்பு செய்யும் நிலையில் உள்ளன.

இவற்றை மாணவ, மாணவியரின் நலன் கருதி உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளியின் மாணவர்களிடம் கலந்துரையாடினார். மாதிரி பள்ளியின் விடுதி, சத்துணவு சமையல் உணவு போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், சிறப்பு மாவட்ட செயலாளர் கோ. சின்னசாமி, தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி, நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img