கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு சராசரியாக 100 ஆக குறைவாக உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கண்காணிப்பு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறையினர் தலைமை செயலர், சுகாதார செயலர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.
இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், ஒமைக்ரான் வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அது வேகமாக பரவக்கூடிய தன்மையுள்ள வைரஸ் எனவும் தற்போது கூறப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவிற்கு செலுத்தப்படும் தடுப்பூசி எந்த அளவிற்கு பாதுகாப்பு என்பது இன்னும் உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதே போல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தான் அதிக பாதிப்பு மற்றும் இறப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு கோவையில் இல்லை மக்கள் அச்சப்பட வேண்டாம், இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
டெல்டா வகை வைரஸ் தான் இரண்டாம் அலைக்கு காரணம். அதன் மூலம் இந்த ஒமைக்ரான் மாற்றமடைந்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
கோவை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பரிசோதனைக்கு தேவையான வசதி உள்ளது. அந்த பரிசோதனையில் அறிகுறி கண்டறிந்தால், சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 5 ஆயிரம் பரிசோதனை கிட் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



