தன்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பிடுங்கிக் கொண்டு தனது மகள் துரத்தி விட்டதாக தள்ளாத வயதில் மூதாட்டி ஒருவர் ஆம்புலன்சில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் சரோஜினி (70). உடல் நலம் குன்றிய இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவருக்கு பாத்தியப்பட்ட வீட்டை எனது மூத்த மகள் பாக்கியலட்சுமி மற்றும் இன்னொரு மகன் மோகனா ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டு என்னிடமிருந்து 17 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
நான் தற்போது எனது இளைய மகள் ராஜலட்சுமி வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தேன். அதன்படி எனது மகள்கள் இருவரும் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் அதையும் கொடுக்காமல், எனது வயது மூப்பை கருத்தில் கொள்ளாமல் என்னை துன்புறுத்தி வருகின்றனர்.
எனவே எனது பணம் நகை மீட்டு தருவதோடு, என்னைத் துன்புறுத்தும் மகள்களிடம் இருந்து தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.



