யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பப்ஜி எப்படி என்பது குறித்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பணத்தை அள்ளிக் குவித்து வந்தவர் பப்ஜி மதன். யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது சிறுவர், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாகவும் இன்ஸ்டாகிராமில் மதன் ஆபாசமாக பேசுவதாகவும் அடுக்கடுக்காக புகார் எழுந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட புகார்கள் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் குவிந்திருக்கும் நிலையில், துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை மதனுக்கு வலை விரித்தது.
பப்ஜி மதனுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டன. அதில், அவரது மனைவி கிருத்திகாவும் சேர்ந்து பணியாற்றி வந்தது அம்பலமானது. அதாவது, கிருத்திகா தான் எல்லாவற்றுக்கும் அட்மின் என கூறப்படுகிறது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தலைமறைவான பப்ஜி மதன், போலீசாரால் என்னை கைது செய்ய முடியாது என சவால் விட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், போலீசார் தன்னை கண்டுபிடிக்க முடியாத வண்ணம் விபிஎன் என்னும் ஐடியை பயன்படுத்தி வந்தார்.
மதனை வலையில் சிக்க வைப்பதற்காக, போலீசார் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில், மதன் தருமபுரியில் இருப்பதாக துப்பு கிடைத்தது. அதன் படி, தருமபுரிக்கு விரைந்த போலீசார் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை இன்று கைது செய்தனர்.
யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட் டுள்ளனர். மேலும்,பெண்களை ஆபாசமாக சித்தரித்தல்,ஆபாசமாக பேசுதல்,ஐடி சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில்,மதனின் 2 சொகுசு கார்கள், 3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், அவரது மனைவி கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில், கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாகவும், மேலும், மதன் பிரபலமடைவதற்காக, அவரை புகழ்ந்து பேச பெண்ணுகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.