ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கான கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாய், 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வினியோகம் இன்று (செவ்வாய்) துவங்கியது.
தமிழகத்தில் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், மே மாதம் உத்தரவிட்டார்.
முதல் தவணையான, தலா 2,000 ரூபாய் வழங்கும் பணி, மே 15 முதல், ரேஷன் கடைகளில் துவங்கியது. அம்மாதம் நிவாரண தொகை வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 2.40 லட்சம் பேர் மட்டுமே முதல் தவணையை வாங்காமல் உள்ளனர்.
நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயுடன், கோதுமை மாவு உள்ளிட்ட, 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு, இன்று (ஜூன் 15) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களை வாங்க எந்த தேதி, நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில் இம்மாதம் 11ம் தேதி முதல், நேற்று வரை ரேஷன் ஊழியர்கள் வழங்கினர்.
அதன்படி, மளிகை தொகுப்புடன் ரூ.2000 வினியோகம் துவங்கியது. ஒவ்வொரு கடையிலும் தினமும் 200 கார்டுதாரர்களுக்கு குறையாமல் வழங்கப்பட உள்ளது.
அதன்படி ரூ.2,000 மற்றும் மளிகைத் தொகுப்பு வழங்குவது தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. காலையிலேயே ரேஷன் கடைகளின் முன் டோக்கன் பெற்றவர்கள் கியூவில் நின்று வாங்கிச் சென்றனர்.
முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றபடி உள்ளனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா நிவாரணம் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் 15-ம் தேதி (இன்று) முதல் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்துக்கேற்ப டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரப் படாமல் இந்த மாத இறுதி வரை சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து பெற்றுக் கொள்ளலாம்.
நிவாரணம் மற்றும் மளிகைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிக்கப்படும்.
14 வகை மளிகைப் பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.