fbpx
Homeபிற செய்திகள்டெல்டாவில் 68,652 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு என குழு அறிக்கை: ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 இழப்பீடு:...

டெல்டாவில் 68,652 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிப்பு என குழு அறிக்கை: ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 இழப்பீடு: ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக சென் னையில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் அதிக அளவு பயிர் சேதம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர்சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட் டது.

இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு கடந்த 12ம் தேதி சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

கிராமம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதேபோல 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக சென்று பார்வை யிட்டார். அவரும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் ஒரு லட்சம் ஏக்கர் நெல், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு பலநூறு கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் குழு ஆய்வுக்குப் பிறகு கடந்த இரு நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் அறிக்கையை தயாரித்து முதலமைச்சரிடம் தாக்கல் செய்தனர். டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

17,46,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார் 68,652 ஹெக்டேர் பாதிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை கார்- சொர்ணவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக,பயிர் மறுசாகுபடிக்கு இடுபொருட்கள் வாங்க ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img