சின்னத்தடாகத்தையடுத்த வீரபாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோவை சாய்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கும் விழா செவ்வாய்கிழமை நடந்தது.
கன்சைன் கணினி நிறுவனமானது ரோட்டரி சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் பெ.நா.பாளையம் வட்டாரத்தில் திப்பனூர், ராக்கிபாளையம், சோமையனூர் 24.வீரபாண்டி, கொண்டனூர், பாப்பநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சின்னத்தடாகம், ராமநாதபுரம், பனப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் சின்னத்தடாகத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல் பயன்பாட்டிற்காக இலவசமாக கணினிகளை வழங்க முன்வந்தது. இதற்கென நடந்த விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிநாதன் வரவேற்றார்.
பெ.நா.பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி, பி.-ஸ்ரீசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகியும், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளுக்கு மொத்தம் 49 கணினிகளை வழங்கினார்.
விழாவில் சமூக ஆர்வலர்கள் சிவசக்தி கணேஷ்,.வரதராஜன், 24.வீரபாண்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ்,முன்னாள் உறுப்பினர் அய்யாசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.