ராசிபுரத்தைச் சேர்ந்த பி.டெக்., பட்டதாரி இளைஞர் நவீன முறையில் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.அரவிந்த் (25) என்ற பி.டெக். பட்டதாரி இளைஞர் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழிலை லாபகரமாக நடத்தி அசத்தி வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் 20 ஆடுகளுடன் தொழிலை தொடங்கிய அரவிந்த் தற்போது 200 ஆடுகள் வரை வளர்க்கிறார். இவற்றை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எங்களது குடும்பம் விவசாய தொழிலை பாரம்பரியமாகக் கொண்டது. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் செய்து வந்தோம். இதனால் சிறு வயது முதல் எனக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருந்து வந்தது. இச்சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு பி.டெக். மெக்கானிக்கல் முடித்தவுடன் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழில் தொடங்க விரும்பினேன்.
வங்கிக் கடன் உதவியுடன் ஆடு வளர்ப்புக்கு உரிய இரண்டு செட் பரண் அமைக்கப்பட்டது. மரத்தால் பரண் அமைத்தால் குறிப்பிட்ட ஆண்டுகளில் பராம ரிப்பு செய்ய வேண்டும்.
இரும்பு, பிளாஸ்டிக் மூலம் பரண் அமைத்தால் 15 ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவில்லை. சுத்தம் செய்வதும் எளிதாக உள்ளது. இரு பண்ணைகளும் தலா 2,500 சதுர அடி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 20 ஆடுகள் மட்டும் இருந்தது. தற்போது 200 ஆடுகள் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து போயர் ரக ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதுபோல் தலச்சேரி, சிரோகி, பிளாக் பீட்டெல் ரக ஆடுகள் உள்ளன. இதில் போயர் ரக ஆடுகள் குறைந்த மாதத்தில் அதிக எடையுடன் வளரும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடுகள் வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. எங்களது பண்ணை குறித்து இணையத்தில் தகவல்கள் உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து ஆட்டை வாங்கிச் செல்கின்றனர்.
ஆட்டிற்குத் தேவையான தீவனப்புற்களை நாங்களே உற்பத்தி செய்கிறோம். அடர்தீவனம் மட்டும் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆட்டின் எரு எங்களது விவசாய பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளவற்றை ஒரு டன் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறோம்.
இத்தொழில் மூலம் அனைத்து செலவும்போக மாதம் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்ட முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



