fbpx
Homeதலையங்கம்எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்- வரவேற்போம்!

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்- வரவேற்போம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்கள் வென்றது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. எதிர்க்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியது.

நேற்று இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதனை முறைப்படியாக நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெ ரிவித்துள்ளார்

ஆட்சியில் இருக்கும் கட்சி அபரிமிதமான பெரும்பான்மையுடன் இருந்தால் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்கும் தைரியம் வந்து விடுகிறது. அது ஏற்கத்தக்கதாக இல்லாமல் இருந்தாலும் வலுவான எதிர்க்கட்சி இல்லாவிட்டால் அதனை தடுக்கமுடியாது. ஏன், எதிர்ப்புக் குரலைக்கூட ஓங்கி எழுப்பிட முடியாமல் போய் விடுகிறது.

ஆனால் இம்முறை பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமராகி இருக்கிறார் மோடி. வலுவான எதிர்க்கட்சியாக இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ளது. இது ஜனநாயக நாட்டிற்கு மிகமிக அவசியம் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மிக முக்கியம் என்பதால் ராகுல் காந்தி அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப்பதவி என்பது கேபினட் அந்தஸ்து பெற்றது. மக்களவையில் பாஜகவிற்கு இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாததால் விவாதங்களின் போது கடும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் அமைக்கும்.

எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.

தற்போதைய 18 வது மக்களவையில் இண்டியா கூட்டணி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 230. ஆனால் ஆளும் பாஜக கூட்டணியின் எண்ணிக்கை 300க்கும் மேல் இருக்கிறது.

கடந்த இரு மக்களவைகளை ஒப்பிடும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மசோதாக்களை நிறைவேற்றும்போது ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதை மட்டுமே தனது கொள்கையாக எதிர்க்கட்சிகள் கருதாமல் விவாதங்களையும் விமர்சனங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல ஆளும் பாஜகவும் சர்ச்சைகளுக்கு இடம்தராமல் மக்களவையில் தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்களின் நலன் கருதி, தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகள் தங்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

அதேநேரத்தில் மக்களவை மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் எந்த களேபரமுமின்றி நடக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும். அதற்கேற்ப இருதரப்பினரின் அணுகுமுறைகளும் அமைய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

இந்த சூழலில் தான் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க உள்ளார். அவரை நாடே வரவேற்கிறது. தலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.

நாமும் வரவேற்று வாழ்த்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img