fbpx
Homeதலையங்கம்பிரதமர் மோடி தலைமையில் பொற்கால ஆட்சி மலரட்டும்!

பிரதமர் மோடி தலைமையில் பொற்கால ஆட்சி மலரட்டும்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் உள்ளன. பிற கட்சிகள் 17 இடங்கள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு எண்ணிக்கை இல்லை என்றாலும் கூட, மத்தியில் நாங்களே ஆட்சி அமைப்போம் என்றும் அதற்கான வியூகங்கள் எங்களிடம் உள்ளன என்று கூறி வந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டது என்ற தகவலும் வெளியானது. ஆனால் அது பலிக்கவில்லை. அதனால் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகத்தை கைவிட்டு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து போராட இந்தியா கூட்டணி முடிவெடுத்து விட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் கொடுத்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக 3வது முறையாக மோடி தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ஆவது உறுதியான நிலையில், மோடி வரும் 8 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

பாஜகவுக்கு இந்த தேர்தல் நல்லதோர் பாடம் எடுத்துள்ளது; படிப்பினையைத் தந்துள்ளது. தனி மெஜாரிட்டி பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை ஆய்ந்து, அதற்கேற்ப தனது போக்கை மாற்றிக் கொண்டு, ஆட்சியை மோடி நடத்தத் தொடங்குவார் என நம்புவோம்.

என்னதான் தேர்தல் முடிவில் சறுக்கல் ஏற்பட்டாலும் மூன்றாம் முறையாக பிரதமர் ஆகி சாதனை படைக்கப்போகிறார் மோடி. இனி வரும் அவரது ஆட்சி காலம், நாடே போற்றும் வகையில் பொற்கால ஆட்சியாக மலரட்டும்; வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img