திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பக ராஜ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
அதன் ஒரு பகுதியாக, நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்கு 60 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், கணத்தம்பூண்டி ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சியில் பிஎம் ஜன்மன் (PM JANMAN) திட்டத்தின் கீழ் ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் காட்டாம்பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறைபின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிப்பிக்கப்பட்டு வரும் 09 ஏக்கர் நாற்றாங்கால் உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு கொய்யா, தேக்கு, பெருநெல்லி, பண்ருட்டி பலா. செம்மரம், வேங்கை போன்ற மர வகைகளும், கற்பூரவள்ளி, கடுக்காய், மழை வேம்பு, ஆடாதோடை போன்ற மூலிகை செடிகளும் என ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட செடி, கொடி மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடர்வண மியாக்கி முறையில் 1500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்று நட்டார்.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரித்திவிராஜ் (கி.ஊ), பரமேஸ்வரன் (வ.ஊ) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.