வ.உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள சிதம்பரனார் சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சம்பத்குமார் நாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவருக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டான கடமை என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு தமிழரும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் எவ்வாறு போராடினார்கள் என்பதை வரக்கூடிய தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை என்றும் அதனை நம்முடைய அரசு நிச்சயமாக செய்யும் என்றார்.
கோவை மத்திய சிறைச்சாலை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்றப்பட உள்ளதால் தற்பொழுது மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மதுக்கரை தனியார் சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து அதிகளவு மாசு வெளியேறுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்திருப்பது குறித்தான கேள்விக்கு அது குறித்து இன்னும் தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம் தான் நம்முடைய அரசு நிற்கும் என்றும் எந்த இடத்திலும் மக்கள் போராடும் அளவிற்கு வைத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.
ஒவ்வொன்றிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டு வருகிறது, அனைத்தையும் முழுமையாக செயல்படுத்துவதற்கு கால நேரங்கள் தேவைப்படும் என்றார். நிச்சயமாக சிமெண்ட் தொழிற்சாலை மூலம் மக்களுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் அவர்கள் பக்கம் தான் நிற்போம் என்றார்.



