மாங்கனி கண்காட்சி வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மைதானத்தில் 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன் (பர்கூர்), ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.
தொடர்ந்து மாங்கனி கண்காட்சி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் எளிதில் மக்களைச் சென்றடையும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகள் துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்புகைப்படக்கண்காட்சி தொடர்ந்து 28 நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.



