மிக்ஜாம் புயல் சென்னையில் பல்வேறு இடங்களை புரட்டிப் போட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பல்வேறு இடங்களில் ஏரிகளும் நிரம்பியதால் ஏரி நீரும் வெள்ள நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதே சமயம் பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணித்துறையினரும் பல்வேறு இடங்களில் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருள்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
10 பேருந்துகள் 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் கோவை மாநகராட்சி பணியாளர்கள் சென்னை சென்று உள்ளனர்.
இந்நிகழ்வில் பணியாளர்களுடன் உரையாடிய மாநகராட்சி ஆணையாளர் பணிகளை பாதுகாப்புடனும் சிறந்த முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.



