கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (32). ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணி ஒன்று வந்துள்ளது. இந்த அணிலை எடுத்த ஹரி தினமும் உணவளித்து வளர்த்து வந்தார்.
அதற்கு அப்பு என்னும் பெயர் சூட்டினார். ஹரி செல்லும் இடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் அவருடனே அணில் பயணித்து வருகிறது.
கடந்த 8 மாத காலமாக ஹரியுடன் அணில் செல்லுமிடங்களில் எல்லாம் சுற்றி வருவதால் அணிலையும் ஹரியையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து ஹரி கூறியதாவது:
எங்கள் வீட்டிற்கு அடிபட்ட நிலையில் அணில் வந்தது அதனை எடுத்து சத்துமாவு கொடுத்து வளர்த்து வந்தேன். நாள் முழுவதும் என்னுடன் தான் இருந்து வருகிறது.
இரவு தூங்கும் போதும் என் அருகிலேயே தூங்கி கொள்ளும். மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும்போதும் என்னுடனே பயணித்து வருகிறது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றாலும் கூட அப்பு கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். இவ்வாறு அவர் கூறினார்.



