ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. அவர்கள் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. குறிப்பாக, பேரறிவாளனை மீட்டெடுக்க அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவனுக்கு பரோல் தர வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தேன். உடனடியாக முதல்வர் 30 நாட்கள் பரோல் கொடுத்தார். அதற்காக நன்றி சொல்வதற்காக தான் நான் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்தித்தேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எழுவர் விடுதலையை சீக்கிரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தேன். கண்டிப்பாக செய்கிறேன் என முதல்வர் உறுதி அளித்தார். நீங்கள் என்ன உணர்வோடு இருக்கிறீர்களோ அதே உணர்வோடு தான் நானும் இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னார் என்றும் தெரிவித்தார்.