கோவை மாவட்ட கலெக்டரிடம் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறுகையில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவை கலெக்டர் நாகராஜனை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் கோவை மாவட்ட எம்எல்ஏக்கள் ஒன்றாக இணைந்து 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். பிறகு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதன்பிறகு எஸ். பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி எல்லா சூழ்நிலையிலும் பொதுமக்களை சந்தித்து தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏக்களை தொடர்ந்து பொதுமக்கள் தொடர்பு கொண்டு தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆதலால் கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பாகவும் அதிமுக சார்பாகவும் இன்று மாவட்ட கலெக்டர் நாகராஜனை சந்தித்து நோயாளிகள் பயன்பெறும் வகையில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளோம். இதை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளோம்.
தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றன. ஆதலால் போர்க்கால அடிப்படையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தொடர்ந்து நாங்கள் பொது மக்களுக்காக மக்கள் பணி ஆற்று வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஐ.ஜி. சுதாகரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.