தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைத்தால் இரும்பு க்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழா, சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா மற்றும் திருநங்கைகளுக்கான நலவாரிய அட்டை வழங்கும் விழா தர்மபுரி மதுரா பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார்.
டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கே.பி. அன்பழகன், எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஏ. கோவிந்தசாமி, வே.சம்பத் குமார் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 130 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் மற்றும் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், 10 திருநங்கைகளுக்கு நல வாரிய அடையாள அட் டை ஆகியவற்றை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
குழந்தை திருமணங் களை தடுத்தல் தொடர் பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.
இது தொடர்பாக ஊராட்சி அளவில் கமிட்டி அமைக்கப்படும். திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் 73 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 2203 கோடி நிதி வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆட்சியில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
நிலுவையில் உள்ள மனுக் களுக்கு தீர்வு காணும் வகையில் தேவையான நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் செயல்படாமல் உள்ளதாக கூறியுள்ளனர்.
விரைவில் இந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கபடும்.
இதேபோன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.