கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரியாவு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ கவுன்சிலர் துரைராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுபத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மாநிலக்குழு உறுப்பினர் சிவராஜ் பேசியதாவது: கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக மோடி அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது.
கடந்த 40 நாட்களில் 21 முறை பெட்ரோல் விலை உயர்ந்து தற்போது 100 ரூபாயைத் தாண்டி உள்ளது.
அதே போல், 56.25 ரூபாயாக இருந்த டீசல் விலை 100 ரூபாயை தொடுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் இந்த சூழ்நிலையில், தொடர்ந்து மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.
இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், விசி நகர செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்று விளக்கவுரை ஆற்றினர்.
இதில் ஏராளமானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில், சிபிஐ வட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.