தருமபுரி, விதை ஆய்வு துணை இயக்குநர் சி.பச்சையப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய மரபணு மாற்றம் செய்த (பிஜி) பருத்தி விதைகளை சாகுபடி மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுமார் 13000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருத்தி சாகுபடி பருவம் ஆரம்பிக்க உள்ள நிலையில் காய்புழுக்கள் எதிர்ப்பு சக்தியுடைய பி.டி. பருத்தி விதைகளை மட்டும் சாகுபடி மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.
விதை விற்பனை நிலையங்கள் அனைத்தும் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு வரும் அனைத்து நிறுவனங்களின் பருத்தி விதைகளின் அனைத்து குவியல் விதைகளும் விதை மாதிரி எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் மற்றும் அகத்தூய்மை ஆகியசோதனைகள் தமிழகத்திலும் களைக்கொல்லி மரபணு மாற்றம் செய்யப்பட்டதா என்பதை அறிய மகாராஷ்டிரா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் அனுப்பி பரிசோதனை நடத்தப்படும்.
மேலும் இவ்வாறு மத்திய மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்படாத களைக்கொல்லி எதிர்ப்பு சக்தியுடைய பருத்தி விதைகளை விற்பனை செய்தாலோ அல்லது விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்திருந்தாலோ அந்நிலையங்களின் விதை விற்பனை உரிமம் ரத்து செய்வதுடன் நீதி மன்ற வழக்கும் தொடரப்படும் என்றும் சாகுபடி செய்த விவசாயிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.